அசுரபார்வை

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து பதிவாகிறது.

Sunday, June 17, 2007

அணுவுக்கு உலையா? வாழ்வுக்கு உலையா?

அணு என்றாலே இரண்டாம் உலகப்போரில் ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா, நாகசாகி மீதான அணுகுண்டு வீச்சும் அதனால் மக்கள் அடைந்த துயரங்களும் நம் கண்முன் தோன்றுகின்றன. அந்த கொடூரத்தை யாரால் மறக்க முடியும்?.அதுபோல அணுஉலை விபத்து என்றாலே உலகைக் குலுக்கிய சோவியத் ரஷியாவின் செர்னோபில் அணுஉலை விபத்துதான் நெஞ்சில் நிழலாடுகிறது. இதனால் இன்றுவரையிலும் தோல்புற்று நோய், இரத்தப் புற்று நோய் உட்பட வகைவகையான நோய்களால் இலட்சக்கணக்கானோர் உயிர் இழந்து உள்ளனர். பல இலட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த மண்ணில் இருந்து பிடுங்கி எறியப்பட்டு புதிய இடங்களில் துன்புற்று வாழ்கின்றனர். 1986
ஏப்ரல் 29 ஆம் நாள் நடைபெற்ற செர்னோபில் அணுஉலை வெடிப்பால் சோவியத் ஒன்றியம் மட்டும் அல்லாது முழு ஐரோப்பாவுமே பாதிக்கப்பட்டது. ஆபத்தில் தத்தளித்த சோவியத் ஒன்றியத்திற்கு நட்பு நாடாக இருந்த இந்தியா அப்போது சுமார் 17,000 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது. செர்னோபில் விபத்து நடந்து இரண்டு ஆண்டுகள் ஆகி கதிர்வீச்சின் பாதிப்பு குறித்த உண்மைகள் மிகத் தீவிரமாக வெளிப்பட்டு கொண்டு இருந்த ஒரு கொடூரமான நேரத்திலேயே 1988 நவம்பர் 20 - இல் இராஜிவ்காந்திக்கும் கோர்பசேவுக்கும் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதுதான் வேதனை. இதன்படி 1000 மெகாவாட் திறனுடைய இரு அணுஉலைகளைக் கூடங்குளத்தில் அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.அணுகதிர் வீச்சு குறித்த ஆபத்தான விளைவுகளை நன்கு அறிந்து இருந்த மக்கள் இதற்கு எதிராக கொதித்து எழுந்தனர். சேவை அமைப்புகள், மாணவர் அமைப்புகள், சுற்றுச்சூழல் அமைப்புகள், விவசாயிகள், அறிவுஜீவிகள், சில அரசியல் கட்சிகள் போன்றவர்களின் அமோக ஆதரவுடன் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டம் தமிழகம் எங்கும் பற்றிப் படர்ந்தது. குறிப்பாக அப்போதைய தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினராகிய திரு. வைகோ நாடாளுமன்றத்திலேயே பிரதமர் இராஜிவ்காந்தியிடம் நேருக்குநேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இத்தகைய கடுமையான எதிர்ப்பின் விளைவாக இராஜிவ் காந்தியின் அப்போதைய தமிழகச்சுற்றுப் பயணத்தில் திட்டமிடப்பட்டிருந்த கூடங்குள அணுமின் நிலைய அடிக்கல்நாட்டு விழா அரசால் கைவிடப்பட்டது, 90களில் சோவித் ஒன்றியம் உடைந்து சிதறியதால் இத்திட்டம் கனவாகவே இருந்தது.
என்றாலும் 1997 இல் இந்திய பிரதமராய் இருந்த தேவகெளடா புதிய இரசிய அதிபரான புதினுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி இத்திட்டம் மீண்டும் உயிரூட்டப்பட்டது. 2001 ஆம் ஆண்டு இந்தியப் பிரதமராய் இருந்த வாஜ்பாய் ரஷ்ய அதிபர் புதினுடன் ஒப்பந்தம் செய்து தன்பங்குக்கு திட்டத்தை உறுதிபடுத்திக் கொண்டார். அதன் பின்னர்தான் திட்டம் வேகம் பிடித்தது. கட்டுமானப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட 1994 சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்திற்கு மாறாக இத்திட்டம் மேற்கொள்ளப்படுவது தான். அச்சட்டப்படி 50 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட எந்த ஒரு திட்டமும் உரிய சுற்றுச்சூழல் ஆய்வுகள் நடத்தப்பட்டு அதன் சாதக, பாதக அம்சங்கள் மக்கள் மன்றத்தில் தெரிவிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டுதான் நிறைவேற்றப்பட வேண்டும்.கூடங்குளம் அணுஉலை 1988 இல் திட்டமிடப்பட்டாலும் அதற்கும் தற்போது நடைமுறை படுத்தப்படுகின்ற திட்டத்திற்கும் தொடர்பே இல்லை. இரண்டும் வெவ்வேறான அம்சங்களைக் கொண்டவை. பழைய ஒப்பந்தப்படி அணுஉலைக்கு குமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை அணையிலிருந்து நீர் எடுத்துக் கொள்ளப்படும், ஆனால் இப்போது செயல் படுத்தப்படுவது எப்படி என்றால் உலைக்கு தேவையான நீர் முழுவதும் கடல்நீரை சுத்திகரிப்பதன் மூலம் பெறப்படும் என்று சொல்லப்படுகிறது. இதற்கு சுத்திகரிப்பு ஆலை அமைக்க டாட்டா நிறுவனத்துடன் 116 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. (சட்டப்படி இதற்கே மக்கள் கருத்தாய்வு நடத்தப்பட வேண்டும்). முதல் ஒப்பந்தப்படி அணுஉலையில் இருந்து வரும் கழிவுகளை சோவியத் ஒன்றியமே எடுத்துக் கொள்ளும், ஆனால் இப்போதைய நிலவரப்படி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு அந்த கதிர்இயக்க கழிவுகளை நாம்தான் கட்டியாள வேண்டும். முதல் ஒப்பந்தம் போடப்பட்ட பின்னர் நெல்லை மாவட்டங்களின் பல இடங்களில் உருகிய பாறைக்குழம்புகள் மேலே வந்ததன, நிலநடுக்கமும் ஏற்பட்டது போன்ற அனுபவங்களும் உள்ளன.
ஆனால் இவற்றையேல்லாம் மூடி மறைத்துவிட்டு மோசடித்தனமாக இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் மட்டும் முனைப்பு காட்டுகிறது நம் அணுமின் உலை கூட்டம். இவ்வாறு திருட்டு தனமாக இரு அணுஉலைகளைக் கட்டிக்கொண்டு இருக்கும் அதே வேளையில் தீராத தாகத்துடன் இனியும் எதிர்க்க மாட்டார்கள் என்ற நினைப்பில் இந்த வளாகத்திலேயே மேலும் நான்கு அணுஉலைகளை அமைக்க திட்டமிட்டு வருகின்றனர். இதற்காக கடந்த குடியரசு தின விழாவின் போது இந்தியாவுக்கு வந்த இரஷிய அதிபர் புதினுடன் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார்.இப்புதிய ஒப்பந்தப்படி அணுஉலைகளை அமைப்பதற்காக மக்கள் கருத்தைக் கேட்டுநிற்கிறது அணுமின் துறை. இத்திட்டத்திற்கான சுற்றுச்சூழல் ஆய்வு அறிக்கையை படித்த பாதுகாப்பான சுற்றுசூழலுக்கான மருத்துவர்கள் குழுவை சார்ந்த டாக்டர். ரமேஷ் தெரிவிக்கும் தகவல்கள் நம் விஞ்ஞானிகளின் மோசடித்தனத்தை அம்பலப்படுத்துகின்றன. இந்த அறிக்கையில் அணுஉலையில் இருந்து எவ்வளவு கழிவு வெளியேறும், அந்த கதிர் இயக்க கழிவுகளை எப்படி பாதுகாக்க போகிறார்கள் என்று கூட சொல்லவில்லை. இத்தகைய அடிப்படை விஷயங்களைக் கூட தெரிவிக்காத இவர்கள் நாளிதழ்களில் முழுபக்க வண்ண விளம்பரங்களை வெளியிட்டு ஆதரவு திரட்டுகிறார்கள். அவற்றின் உண்மை நிலையை பார்ப்போம்.
மிகத் தொலை நோக்கு பார்வையில் பார்க்கும் போது 35 அல்லது 40 ஆண்டுகள் மின்சாரம் கிடைக்கும் என்பதற்காக உலகிற்கே ஆபத்தான கதிரியக்கக் கழிவை பல்லாயிரம் ஆண்டுகள் மடியில் கட்டிக் கொண்டுதான் இருக்க வேண்டுமா? நியாமாகப் பார்த்தால் ஆபத்தான அணுஉலைகளில் செய்யும் மூதலீட்டை காற்றாலைகளில் செய்தாலே பாதுகாப்பாக மின்சாரம் தயாரிக்க முடியும்.நமது குடியரசு தலைவர் எதிர்காலத்தை பற்றிதான் கனவு காணச் சொன்னாரே தவிர பகல்கனவு காணச் சொல்லவில்லை. 2032 ஆம் ஆண்டு அணுசக்தி மூலம் 63000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய ஆசைப்படுகிறது அணுசக்தி துறை. 87 ஆம் ஆண்டுக்குள் 25000 மெகாவாட் 2000த்தில் 45000 மெகாவாட் என்று கனவு கண்ட நம் அணுசக்திதுறை பல்லாயிரம் கோடி ரூபாய்க்களை விழுங்கி விட்டு இன்று வரையிலும் 3310 மெகாவாட் மின்சாரம்தான் உற்பத்திச் செய்கின்றது.
முதலில் அமைக்கப்படும் இரு அணுஉலைகளுக்கு கடும்எதிர்ப்பு இருந்து வரும் போதும் மேலும் நான்கு உலைகளுக்கு தேவையான தண்ணீரை கடல்நீரை சுத்திகரித்து எடுக்கிறார்கள். இந்த சுத்திகரிப்பு கழிவுநீரையும் கடலில்தான் விடப்போகிறார்கள். இதில் பயன்படுத்தப்படும் குளோரின் போன்ற வேதிப் பொருட்களால் அவ்வட்டாரம் கடல்மீன்கள் வாழத்தகுதி அற்றதாக மாற்றப்படும்.இன்று தமிழகத்தின் மின் தேவை அதிக பட்சம் 8000 மெகாவாட்தான். ஆனால் இப்போது உற்பத்தி ஆவது 10100 மெகாவாட் மின்சாரம் ஆகும். அப்படி இருக்கும் போது ஆபத்தான அணுஉலைகள் எதற்காக என்ற கேள்வி எழுகிறது. கூடங்குளத்தில் உள்ள கான்கீரிட் ஆய்வுக் கூடம் ஐஎஸ்ஓ - 9001 தரச்சான்று பெற்றுள்ளது என்று அணுசக்தி துறை பெருமைப்பட்டு கொள்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னால் மின்னணு கட்டுபாட்டிற்கு என கூடங்குளத்தில் கட்டப்பட்டு வந்த இருமாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் பல தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தார்களே. இதுதான் இவர்கள் பெருமைப்பட்டு கொள்ளும் கான்கிரீட்டின் தரம்.
கதீர்விச்சு மக்களை எந்த விதத்திலும் பாதிக்காது என்று இவர்கள் சொல்வதை எப்படி நம்புவது. உலகு எங்கும் செய்யப்படும் ஆய்வுகளால் அணுஉலையில் இருந்து குறிப்பிட்ட தொலைவிற்குள் வாழுகின்ற மக்கள் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது. சென்னைக்கு அருகிலுள்ள கல்பாக்கம் அணுஉலைகளின் அருகிலும் கூட ஆறு விரல்களுடன் குழந்தை பிறப்பது மிகக் கொடூரமான மல்டிபிள்மைலோமா எனப்படும் கதிரியக்க புற்று நோய் போன்றவை ஏற்பட்டுள்ளதை டாக்டர். புகழேந்தி வெளிப்படுத்தி உள்ளார்.இவை எல்லாவற்றையும் விட வேதனை என்னவென்றால் 460 மெகாவாட் திறனுடைய கல்பாக்கம் அணுஉலையிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் அப்பகுதியின் கடல் 10 டிகிரிக்கு மேல் சூடாகும் நிலையில் இங்கு அமைக்கப்படும் 6000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் உலைகளிலிருந்து வெளியேறும் தண்ணீர் மட்டும் கடலை 7 டிகிரி மட்டும் தான் சூடாக்கும் என்று கதை சொல்லுகிறார்கள்.
எல்லாவற்றிற்கும் உச்சகட்டமாக ஜப்பானில் கஷிவசாகி கரிவா என்ற இடத்தில் டோக்கியோ மின் உற்பத்தி நிறுவனம் என்ற தனியார் நிறுவனம் அமைந்துள்ள உலையை நமக்கு உதாரணமாகக் காட்டுகிறார்கள் கூடங்குளம் அணுவிஞ்ஞானிகள்.1985 ஆம் ஆண்டு முதல் அங்கு இயங்கிய ஏழு உலைகளால் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறுகிறது அணுசக்தி துறை. உண்மையில் அங்கு 1990 முதல் 2002 ஆம் ஆண்டு வரை பல சிறிய. பெரிய விபத்துகள் நடந்துள்ளன. அவற்றை நிர்வாகம் மறைத்து வந்துள்ளது. மைய உலைகலன்களில் ஏற்பட்டு இருந்த பல சிறிய, பெரிய கீறல்கள் தண்ணீர் குழாயில் இருந்த வெடிப்புகள் வெளியே சொல்லாமல் மறைக்கப்பட்டுள்ளன. இதனை சரிசெய்ய எடுத்த வீடியோவை கூட திருத்தம் செய்தே அரசிடம் சமர்ப்பித்துள்ளனர்.
இந்த உண்மைகளை எல்லாம் அந்நிறுவனப் பணியாளர் ஒருவர் வெளியே சொல்ல பெரும் போராட்டம் வெடித்தது. மக்களின் கொந்தளிப்பை தாங்க இயலாமல் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான அனைத்து அணுஉலைகளும் இழுத்து மூடப்பட்டன. அப்பகுதிக்கு வந்த ஜப்பான் நிதியமைச்சர் அங்கு கூடியிருந்த வட்டார மக்களிடம் மன்னிப்பு கேட்டார். அந்நிறுவனத் தலைவரும் மக்கள் முன் தரையில் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டார். ஜப்பானைப் பொறுத்தளவில் இவ்வாறு மன்னிப்பு கேட்பது உச்சப்பட்ச இழிவான தண்டனையாகக் கருதப்படுகிறது. இந்த உலையை உதாரணமாக சொல்லிக் கொண்டிருக்கிற நம் விஞ்ஞானிகளும் இப்படிதான் எதிர்காலத்தில் மன்னிப்பு கேட்பார்களோ?நம் நாட்டுத் தலைவர்கள் தான் கூடங்குள அணுஉலை விசயத்தில் அமைதியாக இருக்கிறார்களே தவிர பிறர் அப்படி இல்லை. உதாராணமாக ஆஸ்திரிய வெளியுறவுத் துறை அமைச்சர் எழுப்பி உள்ள கேள்வி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மின்சாரம் தயாரிக்க ஏராளமான மாற்றுவளங்கள் இந்தியாவில் உள்ள நிலையில் கூடங்குளத்தில் ஏன் அணுஉலை அமைக்க வேண்டும் என்று அந்த அம்மையார் எழுப்புகின்ற கேள்வி நம்மவர்களின் செவிகளை எட்டுமா? இனி அமைக்கப்பட இருக்கின்ற உலைகள் எல்லாம் வெளிநாட்டு யுரேனியத்தை நம்பியே தொடங்கப்பட இருக்கின்றன.
கூடங்குளத்தில் ஏற்கனவே கட்டப்படும் இரு உலைகளுக்கும் கூட ரசிய யுரேனியம்தான். இத்தகையச்சூழலில் அணுசக்தியில் இந்தியா தீவிர ஆய்வுக்கு முனைந்தால் இவர்களெல்லாம் யுரேனியத்தை தர மறுக்கும் சூழல் நிலவுகிறது. ஆக பழைய அணுஉலைக்கு ரசிய அடிமையாகவும் புதிய அணுஉலைகளுக்கு அமெரிக்கா அடிமையாகவும் மொத்தத்தில் இந்திய அரசு அடிமைத்தனத்துடன் குடியிருக்கும் நிலை ஏற்படும்.நீண்ட நாள் நட்பு நாடாகிய ஈரானை இக்கட்டான நேரத்தில் கைகழுவிய ரசியா நம் உதவிக்கு வரும் என்று எதிர்பார்க்க முடியாது. நிலைமை இப்படி இருக்கும் போது எப்படியாவது இத்திட்டத்தை நிறைவேற்றியே தீருவது என்று தமிழக அரசு மூர்க்கமாக களமிறங்குவது தமிழக மக்களுக்கு எந்த வகையில் பாதுகாப்பானது என்கிற அச்சமே நம்மை வாட்டுகிறது.எதிர்பாராமல் ஒரு விபத்து ஏற்பட்டுவிட்டால் உலையிலிருந்து 70 கி.மீ வரையிலான மக்கள் நிரந்தரமாக நம் வாழிடத்தைவிட்டு வெளியேற்றப்படும் சூழலில் பழந்தமிழரின் தாயகமான குமரி கண்டத்தையும் இன்னுயிரை ஈந்து பெற்று பாதுகாத்தப் பகுதிகளையும் பற்றிய நினைவுகளுடன் நிரந்தர அகதிகளாக தென் மாவட்ட மக்கள் வெளியேற வேண்டிய நிலை ஏற்படும். 133 அடி உயரத்தில் வானளாவ நிற்கும் தமிழர்களின் அறிவாசான் திருவள்ளுவர் ஆளரவம் இன்றி அநாதையாய் நிற்கும் காட்சியை எண்ணி கலங்கப் போகிறோமா?

0 Comments:

Post a Comment

<< Home