அசுரபார்வை

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து பதிவாகிறது.

Sunday, July 23, 2006

கோகோகோலா வாளெடுக்கிறது கேரளம்; வாளாவிருக்கிறது தமிழகம்

இப்போதெல்லாம் கோகோகோலா என்றாலே கூடவே பிளாச்சிமடாவும் நினைவுக்கு வருகிறது. கேரளத்தின் சித்தூர் தாலுகாவிலுள்ள இந்தக் கிராமத்தில் அமைந்து செயல்பட்டுவந்த கோகோகோலா நிறுவனம் அப்பகுதியின் நீர்வளத்தை முற்றிலும் சுரண்டியதோடு, தனது கழிவுகளால் அப்பகுதியையே மாசுபடுத்தியும்விட்டது. இதைத்தொடர்ந்து பெருமளவிலான மக்கள் போராட்டத்தைச் சந்தித்ததால் முதன்முதலாக 2002ல் அந்த ஆலை மூடப்பட்டது. "நவீனமயமாக்கம்", "திறந்த சந்தை", "முன்னேற்றம்", "தனியார்மயம்", "தாராளமயம்" என்ற சொற்களோடு இந்திய அரசால் திறந்துவிடப்பட்ட கோகோகோலா நிறுவனம் தண்ணீரை கிட்டத்தட்ட இலவசமாகவே பெறுவதுபோல உறிஞ்சி எடுத்து அதனை கணக்கிடவே முடியாத அளவு இலாபம் வைத்து அந்த மக்களுக்கே விற்கும் அவலம் இங்குதான் நடைபெற்றுவந்தது. தனது இலாப வேட்டையை தொடர அது இயன்ற அனைத்து வழிகளிலும் முயன்றது. இந்தப் போராட்டங்களையெல்லாம் எப்படியாவது முடித்துவைத்து மீண்டும் தனது தங்கவேட்டையைத் தொடரலாம் என்று நினைத்திருந்த கோகோகோலாவுக்கு அப்படியான நிரந்தர வெற்றி கிடைப்பதுபோலத் தெரியவில்லை.

அப்பகுதியில் தொடர்ந்து நிலவும் தண்ணீர் பிரச்சினை அப்படி. அதோடு ஏற்கனவே கோகோகோலாவுக்கு எதிரான போராட்டத்தை ஆதரித்துவந்த இடதுசாரி அணியே இப்போது கேரளத்தில் ஆட்சியைப் பிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கோகோகோலா எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்த வேலூர் சுவாமிநாதன், மைலம்மா, விலயோடி வேணுகோபால், மாரியப்பன் மற்றும் பிளாச்சிமடா ஆதரவுக்குழுவைச் சேர்ந்த அஜயன் ஆகியோர் அடங்கிய குழுவினர் கடந்த சூன் 15ஆம் நாள் கேரள முதல்வர் அச்சுதானந்தனைச் சந்தித்து இதுதொடர்பாக உரையாடி, மனு அளித்துள்ளனர். அதில் பிளாச்சிமடா கோகோகோலா ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியுள்ளனர். அதோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கப்படவேண்டும் என்றும் கோகோகோலா நிறுவனத்திற்கு எதிராக குற்ற வழக்கு பதிவு செய்யப்படவேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து அரசு தரப்பில் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கடும் மக்கள் எதிர்ப்பின்விளைவாக மார்ச் 2004 வரை மூடப்பட்டிருந்த இந்த ஆலையை மீண்டும் திறக்க நிர்வாகம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு அவ்வப்போது சிறியளவில் ஆதரவு இருப்பதுபோல தெரிந்தாலும் பெருமளவில் பயன் ஏதும் இல்லை. அதோடு தொழிற்சாலைக்குள்ளும் அவ்வளாகத்தைச் சுற்றிலும் உள்ள பகுதிகளிலும் காட்மியம் மற்றும் காரீயம் ஆகியவை மிகுந்த அளவில் காணப்பட்டதால் ஆகஸ்ட் 2005ல் கேரள மாசு கட்டுப்பாட்டு வாரியம் அத்தொழிற்சாலைக்கு நிறுத்தல் ஆணை வழங்கியது.

அதோடு, கேரள அரசும் பிளாச்சிமடா பகுதியில் இருந்து நீரை எடுப்பதற்கு எதிராக உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில், ஏழைகளின் நீரை உறிஞ்சி பணக்காரர்களுக்கு அருந்தக் கொடுப்பதாக குற்றம் சாட்டியது. இவையெல்லாம் கோகோ கோலாவுக்கு பெரும் பின்னடைவுகளாக அமைந்தன.
அண்மையில் முதலமைச்சரைச் சந்தித்த குழுவினர் பல உறுதிமொழிகளை அரசிடம் பெற்றுள்ளனர். அவற்றில் சில,
  • ஏற்கனவே எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதே கோகோ கோலா எதிர்ப்பாளர்களுடன் இணைந்து செயல்பட்டு வந்த முதலமைச்சர் அச்சுதானந்தன் இச்சிக்கலைத் தீர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக ஊறுதியளித்துள்ளார்.

  • வேளாண்துறை அமைச்சர் முல்லக்கர இரத்தினாகரம் அப்பகுதியிலுள்ள உழவர்களுக்கும் மக்களுக்கும் ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாக்குறை மற்றம் மாசுபாடு பிரச்சினைகளைக் குறித்து மதிப்பிட ஒரு நிபுணர் குழுவை அமைத்துள்ளார்.

  • சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரும் கேரள மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறுப்பாளருமான பி.கே. சிறீமதி சுகாதார சேவைகள் துறை இயக்குநருக்கு வழங்கியுள்ள அறிவுறுத்தலில் சுகாதார முகாம்கள் நடத்துமாறும் நிலைமை குறித்து இடைக்கால அறிக்கையொன்றை வழங்குமாறும் கூறியுள்ளார். அதோடு, சட்டத்துறையோடும் மாசுகட்டுப்பாட்டு வாரியத்தோடும் கலந்துபேசி பொருத்தமான பிரிவுகளில் கோகோ கோலாவுக்கு எதிராக குற்ற வழக்குகள் தொடருவது குறித்து முடிவெடுப்பதாகவும் அறிவித்துள்ளார்.

  • உள்துறை அமைச்சர் கொடியேரி பாலகிருஷ்ணன் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான மக்கள் மீது போடப்பட்ட குற்ற வழக்குகள் யாவும் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்துள்ளார்.

  • பிற்படுத்தப்பட்டோர் மற்றம் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஏ.கே. பாலன் தனது மாசால் பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களை பாதித்துள்ள கோகோ கோலா நிறுவனத்திற்கு எதிராக குற்ற வழக்குகள் தொடரப்படுவது குறித்து ஆராயப்படும் என்று தெரிவித்துள்ளார்.

  • சட்ட அமைச்சர் எம்.விஜயகுமார் கோகோ கோலா தண்ணீர் எடுப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் கேரள அரசின் சார்பில் வாதாட ஒரு சிறப்பு வழக்கறிஞர் நியமிக்கப்படுவார் என்று அறிவித்துள்ளார்.

  • நீர்வளத்துறை அமைச்சர் என்.கே. பிரேமச்சந்திரன் கோகோ கோலாவுக்கு எதிராக சித்தூர் தாலுகா விடுத்துள்ள எச்சரிக்கை அறிக்கை தொடர்பாக தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார். 2005 நவம்பரில் பிளாச்சிமடா பகுதி தேவைக்கு அதிகமாக நீர்வளம் சுரண்டப்பட்டுள்ள கறுப்புப் பகுதியாக பட்டியலிடப்பட்டுள்ளது. இதன்படி, அப்பகுதியில் செயல்பட்டுவரும் அனைத்து தொழிற்சாலைகளும் நிலத்தடி நீரை எடுத்துப் பயன்படுத்துவதற்காக தற்போது மேலும் ஒரு அனுமதியை அரசிடம் பெற்றாகவேண்டும்.

ஆக இத்தகைய தடைகளையெல்லாம் தாண்டி இனியும் அங்கே கோகோ கோலா ஆலை செயல்படுவதென்பது இயலாத காரியம் என்றே தோன்றுகிறது.
அங்கே பாதிக்கப்பட்ட பிறகு இத்தனை பெரிய போராட்டங்களின் பின்னர் இப்போதுதான் இத்தனை நடவடிக்கைகள்- மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், நம் தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது...

கடந்த மார்ச் 23 ஆம் நாள் மாவீரன் பகத்சிங் மற்றம் அவனது தோழர்களின் 75ஆம் ஆண்டு நினைவையொட்டி, ஏற்கனவே தாமிரபரணி நீரை கோகோ கோலாவுக்கு கொடுப்பதற்கு எதிராகப் போராட்டம் நடத்திவரும் மக்கள் கலை இலக்கியக் கழகம் உள்ளிட்ட நக்சல்பாரி அமைப்புகள் போராட்டம் நடத்தின. அதேநாளில் நாகர்கோவிலில் மார்க்சிய பொதுவுடைமைக் கட்சியின் இளைஞர் பிரிவான இந்திய சனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த சில இளைஞர்களும் இளம் பெண்களும் நகரின் மையத்திலுள்ள அண்ணா விளையாட்டரங்கத்தின் முன்பு கோகோ கோலாவுக்கு எதிராக இளநீர் விற்கும் போராட்டம் நடத்தினர்.

அவர்களைக் கைதுசெய்த காவல்துறையினர் அவர்கள்மீது பயங்கர ஆயுதங்களுடன் பேருந்தை எரிக்க முயன்றதாக வழக்கு போட்டு சிறையில் தள்ளினர். அடப்பாவிகளா இளநீரை வெட்டிக்கொடுக்க கையில் அரிவாள் இல்லாமல் என்ன... மயிலிறகையா வைத்துக்கொண்டிருப்பார்கள்?. இனிமேல் இப்படி கறிக்கடைக்காரர்கள், காய்கறிக்கடைக்காரர்கள் ... ஏன் சவரத்தொழிலாளர்கள்கூட கைது செய்யப்படலாம்... பயங்கர ஆயுதம் வைத்திருந்ததாக.

அய்யப்யோ.... அது புரட்சித் தலைவி ஆட்சி. இப்போதுதான் கலைஞர் ஆட்சி வந்துவிட்டதே இனி அப்படியெல்லாம் ஏதும் நடக்காது என்று நீங்கள் மகிழ்ச்சியடைய காரணங்கள் இல்லை. ஏனென்றால்... அண்மையில் தமிழகத்திலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய தேர்தல் பரப்புரையின்போதும் வாக்குப்பொறுக்க வந்த யாருமே, "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கோகோ கோலாவுக்கு தாமிரபரணித் தண்ணீரை அளிக்கமாட்டோம்" என்று ஒரு பேச்சுக்குச்கூட சொல்லவில்லை என்பது இவ்விசயத்தில் இந்த கட்சிகளுக்கிடையே போபோ போலா விசயத்தில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது. எனவேதான் அதை ஒரு தேர்தல் பிரச்சினையாக யாரும் முன்வைக்கவில்லை.
மக்கள்விரோத கோகோ கோலாவுக்கு எதிராக வாளெடுக்கிறது கேரளம். தாமிரபரணியைக் காப்பாற்ற வாளெடுக்காமல் வாளாவிருப்பதோடு... போராடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கிறது தமிழகம்.

அசுரன்
(நாகர்கோவிலில் இருந்து வெளியாகும் அனலி இதழில் வெளியான கட்டுரை)

0 Comments:

Post a Comment

<< Home