அசுரபார்வை

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து பதிவாகிறது.

Sunday, July 23, 2006

மாயமான பசுமைப் போராளி புருனோ மான்சர்





புருனோ மான்சர்- சுவிட்சர்லாந்தின் பேசல் நகரில் பிறந்தவர். ஒரு சாகசக்காரராக இருந்து சுற்றுச்சூழல் போராளியாக மாறியவர். அவரத சாகசத்திற்கு எடுத்துக்காட்டாக 1996-ல் சுவிட்சர்லாந்தில் பனிபடர்ந்த இரயில்வே இரும்பு கயிற்றில் 3.கி.மீ. தூரம் அவர் சறுக்கிச் சென்றதை சொல்லலாம்.
மலேசியாவுக்கு அருகிலுள்ள போர்னியோவின் தொடப்படாத 45% கன்னிக் காடுகளும், அங்கு வாழும் பழங்குடியினரும் அவரை ஈர்த்தனர். பெருமளவில் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த மரம் வெட்டும் நடவடிக்கையில் இருந்து அக்காட்டுப்பகுதியைக் காப்பாற்ற அவர் விரும்பினார்.
மலேசியாவில் 20 லட்சம் மக்கள் வாழும் ஒரு மாநிலத்திற்கு மரம் வெட்டலின் மூலம் கிடைக்கும் வருவாய், கடந்த (2000) ஆண்டு மட்டும் 4700 கோடி ரூபாய் என்றால் அங்கு நடைபெறும் மரம் வெட்டலின் அளவைப் புரிந்துகொள்ளுங்கள்.
தனது வாழ்க்கை முழுவதும் போர்னியோவில் வாழும் பெனான் பழங்குடி மக்கள் போலவே, அவர்களுடனேயே வாழ விரும்பி 1984-ல் அவர் அப்பழங்குடியினர் பகுதிக்குச் சென்றார்.
இவரை அவர்கள் முதலில் ஏற்கவில்லை. ஒரு நாய்க்குட்டி போல விடாது தொடர்ந்த பின்னரே அவரை தம்முடன் அனுமதித்தனர்.

அவர்களுடன் வாழ்ந்த போது, இருமுறை சாவின் விளிம்பைத் தொட்டுத் திரும்பினார் அவர். ஒருமுறை மலேரியா காய்ச்சல் பிறகு ஒரு முறை நச்சுப் பாம்புக்கடி அவர் கிட்டத்தட்ட அந்த மக்களின் செயலாளர் போல ஆனார். அவர்களின் சார்பில் மரம் வெட்டும் நிறுவனங்களுக்கும் அரசுக்கும் ஆங்கிலத்தில் கடிதங்கள் எழுதினார்.
பெனான் பழங்குடியும் புருனோவின் நண்பருமான அலாங் கூறுகிறார், "மரம்வெட்டலால் காடுகள் அழிந்துவிட்டன. இதனால் வேட்டையாடுதல் முற்றிலும் நின்றுவிட்டது. நாங்கள் இதைவிட்டு வேறு எங்கே செல்வது? இதுதான் எங்களுக்குக் கடைசி இடம்".
ஆம். காட்டையே நம்பியிருந்த 9000 பெனான் இன மக்களும் தம் வாழிடமான காடுகளை விட்டு புல்டோசர்களால் சிதறடிக்கப்பட்டனர். தற்போது 200 பேர் மட்டுமே ஏதுமற்ற நாடோடிகளாக உள்ளனர். சிலர் சிறிய வீடுகளில் வசித்தபடி விவசாயம் செய்கின்றனர். அரசிடம் அடையாள அட்டைக்காக கையேந்தி நிற்கின்றனர்.
கடந்த சனவரி, பிப்ரவரி மாதங்களில் அலாங்கின் இரு மகன்களும் கொல்லப்பட்டு விட்டனர். அவரது இளைய மகனான அயாங்கின் வயது 18, மரம் வெட்டிகள் மீன்பிடிப்பதற்காக ஆற்றில் நஞ்சை கலக்க அந்த ஆற்றுநீரைக் குடித்ததாலேயே இந்த இருவருமே கொல்லப்பட்டனர் என்பது நெஞ்சைப் பிழியும் சோகம்.
"எங்கள் நிலையை கடிதம் மூலம் அரசுக்கும் மரம்வெட்டி நிறுவனங்களுக்கும் புருனோ தெரிவித்து வந்தார். எப்போதுமே அவர் சண்டையிடாதீர்கள் யாரையும் தாக்காதீர்கள் என்றே கூறிவந்தார். இன்று அவரே இல்லை" என்று கதறுகிறார் அலாங்.


புருனோ காட்டில் வாழும் போது பல இடங்களில் பழங்குடி மக்கள் சாலைகளில் தடைகளை ஏற்படுத்தி மரம் வெட்டிகளைத் தடுக்க முயன்றனர். சாலை மறியல் போராட்டங்களும் நடைபெற்றன. புருனோ என்ற அயல் நாட்டுக்காரர் தம் நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடுவதாகவும் அவரைக் கைது செய்யுமாறும் அரசு ஆணையிட்டது.
புருனோ இருமுறை காவலர்களால் பிடிக்கப்பட்டு தப்பினார். இரண்டாவது முறை காவல்துறை வாகனம் சென்றுகொண்டிருந்தபோது வாகனத்திலிருந்து ஆற்றில் குதித்து தப்பினார். அப்போது காவலர்கள் ஆற்றில் சுட்டனர் அந்தச் சம்பவத்தின்போது 4 ஆண்டுகாலமாக அவர் குறிப்புகள் எழுதிவைத்திருந்த குறிப்பேடுகளையும் படங்களையும் இழந்தார்.
1990-ல் அரசு தன்னை தீவிரமாகத் தேடுவதை புருனோ உணர்ந்தார் ஒருமுறை பெனான் பழங்குடியினர் அயல்நாட்டு நபர்களை மானிடவியல் சோதனைக்கு அனுமதிக்கக் கூடாது என்றார் மலேசியப் பிரதமர் மகாதிர்முகமது.
சுற்றுச்சூழல் அமைப்பு நண்பர்கள் நிலைமையை உணர்ந்து ஐரோப்பாவில் சென்று பிரச்சாரம் செய்த இப்பகுதிக் காடுகளைக் காப்பாற்றலாம் என்று பேசி அவரை சம்மதிக்க வைத்தனர். தலைமுடியை வெட்டி, போலியான கடவுச்சீட்டுடன் புருனோ சரவாக்கை விட்டு வெளியேறினார். சரவாக் காடழிப்புக்கு எதிராக 1993-ல் அவரது நண்பரும் மருத்துவருமான மார்ட்டினுடன் சேர்ந்து சுவிட்சர்லாந்து நாட்டின் நாடாளுமன்றம் முன் பட்டினிப்போராட்டம் நடத்தினார். 40 நாட்களின் பின்னர் மார்ட்டின் வெளியேறிட 60 நாட்களாக புருனோ தொடர்ந்தார். அவர் சாவின் விளிம்பில் இருக்கையில் தனது தாயாரின் வேண்டுகோளை ஏற்று உண்ணாவிரதத்தை கைவிட்டார்.
அரசு அவரது கோரிக்கையை ஏற்று காட்டுமர இறக்குமதிக்குத் தடைவிதிக்கவில்லை. ஆனால் பெனான், புருனோ போன்ற பெயர்களும் செய்தியும் சுவிட்சர்லாந்து, பிரான்சில் பரவியது. இதனால் மரத்தின் பயன்பாடு குறைந்தது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் அல்கோர், சரவாக் பிராந்தியத்தில் மரம் வெட்டப்படுவதை எதிர்த்து கண்டனத் தீர்மானம் கொண்டுவந்தார். 1990 களில் மரம் வெட்டல் தீவிரமானது எனினும் இறுதிப் பகுதியில் ஆசியப் பொருளாதார நெருக்கடியின்போது குறைந்தது.
கருத்தரங்கம், பிரச்சாரம் என்றிருப்பது புருனோவுக்கு பிடிக்கவில்லை. அவர் புருனோ, இந்தோனேசியா வழியாக சரவாக்கிற்குள் நுழைய முடிவு செய்தார். 1997-ல் ஒரு நண்பருடன் சிங்கப்பூர் வழியாக மலேசியா சென்று கோலாலம்பூரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடக்கும்போது கிளைடர் விமானத்தில் பறக்கத் திட்டமிட்டார். இதையறிந்த மலேசிய அரசு எச்சரிக்கை விடுத்தது.
1998-ல் புருனே சென்று 300 மீட்டர் அகல லிம்பாஸ் ஆற்றை நண்பர் கிறிஸ்டி நட்டுடன் நள்ளிரவில் நீந்திக் கடந்தார். 3 வாரம் சரவாக்கில் மறைந்திருந்தார். அப்போது 25செ.மீ. நீளமுள்ள இரும்பு லாடங்களை 4 டன் வாங்கி மரங்களின் அடிப்பகுதியில் பதிக்க திட்டமிட்டார். அம்மரங்களை எந்திரங்கள் மூலம் வெட்டும்போது அவை உடைந்து பெரும் காயங்கள் ஏற்படும். அமெரிக்காவில் மரவெட்டலை எதிர்ப்போர் 1990களில் இதையே செய்தனர்.
இதனிடையே 1997-ல் டயாக் பழங்குடி மக்கள் தமது நிலத்தை அழித்து எண்ணெப்பனை சாகுபடி செய்வதை எதிர்த்துப் போராடியதில் காவல்துறை துப்பாக்கிச் சூட்டுக்கு ஒருவர் உயிரிழந்தார். 15 பேர் காயமடைந்தனர். 1999ல் ஆத்திரமடைந்த ஒரு கிராமப் பழங்குடியினர் ஒரு மரம் வெட்டு நிறுவனத்தின் 4 ஊழியர்களைக் கொன்றனர்.
தனது 46வது வயதில் புருனோ காணாமல் போகையில் புருனோவின் மனங்கவர்ந்த கன்னிக் காடுகளில் 5% மட்டுமே எஞ்சியிருக்கின்றன. அவரது உள்ளத்தைக் கொள்ளை கொண்ட போர்னியோவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள பெனான் பழங்குடி மக்களும், 2,000 மீட்டர் உயரமுடைய பதுலாவி மலையுச்சியும் புருனோ இல்லாமல் வெறுமையாகிக்கிடக்கின்றன.
அவரது தலைக்கு மரம் வெட்டிகள் விலை நிர்ணயம் செய்திருந்ததாகவும், 16 மாதங்களுக்கு முன்பு அவர் காணாமல் போனபோது அப்பகுதியில் காவல்துறை மற்றும் மரம் வெட்டிகளின் நடமாட்டம் இருந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

புருனோ 1998-ல் ஜெனிவாவில் ஐ.நா.சபை கட்டிடம் மீது பாரசூட்டில் குதித்தார் 1999-ல் மலேசியாவின் சரவாக் மாகாணத் தலைநகர் குசிங் மீது கிளைடர் விமானத்தில் பறந்தார். அப்போது முதல்வருக்கு பரிசாக அளிக்க ஒரு பொம்மை ஆட்டுக்குட்டியை எடுத்துச்சென்றார். ஆனால் கைது செய்யப்பட்டு கோலாலம்பூரில் சிறையில் அடைக்கப்பட்டார். தனது சாகசத் திறனை கின்னசில் இடம்பிடிக்கப் பயன்படுத்தாமல் காடுகளையும் கானக மக்களையும் பாதுகாக்கப் பயன்படுத்திய புருனோவின் செயலை மறக்க முடியுமா?
அவரது நண்பரும் சூரிச் விலங்கியல் பூங்கா நிர்வாகியுமான கிராஃப், "சில பழங்குடியினர் தமது நிலத்தை மரம் வெட்டும் நிறுவனங்களுக்கு விற்றுவிட்டனர். சில நெருங்கிய நண்பர்களே பாரம்பரிய உடைகளைத் துறந்து டி-சர்ட், ஷீ என மாறிவிட்டனர். காணும் இடமெங்கும் மரம் வெட்டு நடைபெற்றுவந்தது. புருனோ பாதி குழந்தைமனமும், பாதி கதாநாயகத் தன்மையும் கொண்டவர். அவரால் இவற்றை ஏற்க முடியவில்லை. எனவே தனக்கு விருப்பமான பதுலாவி மலையில் இறந்திருக்கலாம்" என்கிறார்.
பல பழங்குடி நண்பர்களும், ஐரோப்பிய நண்பர்களும், ஹெலிகாப்டரில் தேடியும் எந்தவொரு அடையாளத்தையும் காண முடியவில்லை. அவர் மறைந்துவிட்டார்-எப்படி-ஏன் என்பதுதான் தெரியவில்லை. எனினும் அந்தப் பசுமைப் போராளியின் நினைவு மறையாது.
-அசுரன்
இக்கட்டுரை 2001 டிசம்பரில் எழுதப்பட்டது. கூடுதல் விபரங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம்.

0 Comments:

Post a Comment

<< Home