அசுரபார்வை

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து பதிவாகிறது.

Sunday, July 23, 2006

முதல் அணுகுண்டு வீசப்பட்ட 1945 ஆகஸ்ட் 6 காலை 8.15


1945 ஆகஸ்ட் 6 ஆம் நாள் சப்பானின் ஹிரோசிமா நகரில் உலகின் முதல் அணுகுண்டு அமெரிக்காவால் வீசப்பட்டபோது தப்பிப் பிழைத்த குழந்தைகளின் உணர்வுகளை தொகுத்துள்ளார் பேராசிரியர் அரடா ஒசாடா. அதிலிருந்து சில பகுதிகள்.

கிய்கோ சகச (1945-ல் 6 வயதாயிருந்தவர்)
"அணு குண்டால் ஹிரோசிமா நகரம் முற்றாக அழிக்கப்பட்டபோது, அதிலிருந்து தப்பிப் பிழைத்த ஒரு மனிதர் ஓலமிட்டவாறே வந்தார். அதைக் கேட்டதும் எனது பாட்டி ஹிரோசிமாவை நோக்கிச் சென்றார்.
ஒரு வாரத்தின் பின்னர் அவர் திரும்பி வந்தபோது "அம்மா எங்கே?" என்றேன்.
"அவளை எனது முதுகில் தூக்கி வந்திருக்கிறேன்" என்றார் பாட்டி.
நான் மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டேன், "அம்மா....."
ஆனால் நான் மிக நெருங்கிச்சென்று பார்த்தபோது பாட்டியின் முதுகில் ஒரு பயணிகள் பை தொங்கிக் கொண்டு இருப்பதைத்தான் பார்க்க முடிந்தது.
நான் ஏமாற்றமடைந்தேன்.
எனது சகோதரியும் எங்கள் அண்டை வீட்டினரும் அழத் தொடங்கினர். ஏன் என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. பிறகு பாட்டி அந்தப் பையை கீழே வைத்து, அதில் இருந்து சில எலும்புகளை வெளியே எடுத்து அனைவரிடமும் காட்டினார். அதில் என் தாயாரின் தங்கப் பல்லும், அவரது கை எலும்புகளும் இருந்தன.
அப்போதும் என்னால் எதையும் புரிந்துகொள்ள இயலவில்லை.

கிமிகோ தகாய (1945-ல் 5 வயது சிறுமி)
சில நிமிடங்களில் ஹிரோசிமாவே நாசமாக்கப்பட்ட அந்த 1945 ஆகஸ்டு 6 ஆம் நாளை நினைத்துப்பார்க்கிறேன்.
அன்று நானும் எனது தோழி தாத்சுகோவும் அண்டை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு விமானம் வரும் ஒலியை நான் கேட்டேன்.
"ஏய்...விமானம்" என்றேன். அந்த நொடியில் மின்னலடித்ததுபோல ஒரு ஒளிவெள்ளம் தெரிந்தது. அஞ்சிய நான் அண்டை வீட்டுக்குள் ஓடி அப்பெண்ணை பிடித்துத் தொங்கினேன். ஆனால் அவளோ மிகவும் கிலியடைந்திருந்தாள். என்னை உதறி விட்டு தனது கணவனை அணைத்துக்கொண்டாள். ஒரு நீளத் துணியை எடுத்து தனது இடுப்பில் கட்டிக்கொண்டு, தனது கணவனுடன் வீட்டை விட்டு ஒடினாள்.
எனக்கும் எனது தோழிக்கும் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. விரைந்து இருள் பரவி, வீட்டின் கூரை உடைந்து விழத் தொடங்கியது. கண்களை அகலத் திறந்தபடி நாங்கள் இருவரும் கட்டிப் பிடித்துக்கொண்டோம்.
தாத்சுகோவின் தாயார் அச்சத்துடன் கூவி அழைத்தார். பார்த்ததும் தாத்சுகோவை அழைத்துச் சென்றுவிட்டார். நான் தனித்துவிடப்பட்டேன். நான் அழத் தொடங்கினேன். முகம் முழுவதும் புழுதி அப்பிய மற்றொரு அண்டை வீட்டுக்காரி, "அழாதே, உங்க அம்மா இங்கே இருக்கிறாள்" என்று கூறிவிட்டு ஓடினாள் நான் மீண்டும் தனித்து விடப்பட்டேன்.
சிறிது நேரத்தில் "கிமிகோ! கிமிகோ" என்று அழைக்கும் எனது சகோதரியின் குரல் கேட்டது. எனது தாயாரும் வந்துவிட்டார். நாங்கள் நேரத்தை வீணாக்காமல் பாதுகாப்பான இடத்தைத் தேடினோம்.
நாங்கள் நடந்து சென்றபோது வயிறூதிய வீரர்களின் உடல்கள் ஆற்றில் மிதப்பதைக் கண்டோம். அவர்கள் அணுத்தீயில் இருந்து தப்பிப்பதற்காக ஆற்றில் குதித்தவர்கள். சாலையோரங்களில் பிணங்கள் நிறைந்துகிடந்தன.
மற்றோரிடத்தில், மரத் தடியில் கால் சிக்கியதால் நகரவும் முடியாமலிருந்து ஒரு பெண்ணைக் கண்டோம். வேறு யாரைப்பற்றியும் கவலைப் படாமல் எல்லோரும் ஓடிக் கொண்டிருந்தனர். எனது தந்தை கோபமாகக் கத்தினார் "இங்கே சப்பானியர் யாருமே இல்லையா?". பின்னர் அப்பெண்ணை விடுவித்தார்.
மற்றோரிடத்தில் முழுக்க தீக்காயங்களுடன் ஒரு மனிதன் சாவின் விளிம்பில் நடந்துகொண்டிருப்பதைப் பார்த்தோம். எனது தாயார் தன்னால் இனிமேல் நடக்க முடியாது என்றும் தன்னை அங்கேயே விட்டுவிட்டுச் செல்லுமாறும் கூறிவிட்டு களைத்து கீழே அமர்ந்துவிட்டார். அப்படியே விட்டுச் செல்ல மனமில்லை. அருகிலிருந்து கலங்கிய நீரை எடுத்துக்கொடுத்தோம். சிறிது ஓய்வெடுத்தபின் மீண்டும் எங்களுடன் சேர்ந்து நடந்தார்.
நாங்கள் கிராமப்பகுதிகளில் சென்றபோது விவசாயிகள் எங்களைத் திகைப்புடன் பார்த்து என்ன நடந்தது என்று கேட்டார்கள். நாங்கள் பண்ணை வீடுகளைக் கடந்து சென்றபோது மக்கள் வெளியே வந்து சோற்று உருண்டைகளைத் தந்தனர்.
நாங்கள் எங்கள் உறவினர்களின் வீட்டில் ஒரு மாதத்திற்கும் மேல் தங்கியிருந்தோம்.
நாங்கள் வந்து சேர்ந்ததும் எனது தாயார் முதுகில் காயம்பட்டு வலிப்பதாகக் கூறினார். நான் பார்த்தபோது முக்கால் இஞ்ச் அகலமும் ஒன்றரை இஞ்ச் நீளமும் உடைய ஒரு கண்ணாடித்துண்டு காயப்படுத்தியிருப்பதைப் பார்த்தேன். எனது தம்பியை தனது முதுகில் தூக்கி நடந்ததால் அது ஆழமாகக் காயப்படுத்தியிருந்தது. ஒரு மருத்துவரைச் சென்று பார்த்தோம்.
மறுநாள் தந்தை எனது சகோதரியைத் தேடி சென்றார் எனது சகோதரி பணிபுரிந்த ஹிரோசிமா அஞ்சலகத்திற்கு அருகிலிருந்த அய்யோய் பாலத்தில்தான் அணுகுண்டு வீசப்பட்டிருந்தது. "அம்மா...." என்றோ, "ஐயோ" என்றோ அலறக்கூட நேரம் தராமல் அவள் கொல்லப்பட்டிருப்பாள்.
அங்கு பணிபுரிந்த ஒருவரைத் தவிர பிற அனைவரும் கொல்லப்பட்டிருந்தனர். பிழைத்த அந்த ஒருவர் கொல்லப்பட்டவர்களின் எஞ்சிய சாம்பலை சேகரித்து அவரவர் வீடுகளில் கொடுத்தார்.
எனது சகோதரியின் சாம்பலும் கிடைத்தது.
இதுபோல ஆயிரமாயிரம் சோகக் கதைகள்.
நமது தமிழ்நாட்டில் ஏற்கனவே கல்பாக்கம் அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. கூடங்குளத்தில் அணுஉலை கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. அணுஉலை என்பது பல அணு குண்டுகளுக்குச் சமம் என்பதை செர்னோபில் விபத்து தெளிவாக எடுத்துக்கூறியிருக்கிறது.
ஹிரோசிமாவிலும் நாகசாகியிலும் வீசப்பட் டவை சிறிய குண்டுகள் என்பதால் தப்பிப் பிழைத்து சேதி சொல்ல கொஞ்சம் பேராவது உயிருடன் இருந்தார்கள். கல்பாக்கத் திலோ கூடங்குளத்திலோ ஏதாவது ஆனால் நமக்கு என்ன ஆனது? எப்படி ஆனது என்று சொல்லவாவது யாராவது மிஞ்ச முடியுமா?
வருமுன் காப்பதுதானே அறிவுடைமை! அழிவு வந்தபின் ஒப்பாரி வைத்து என்ன பயன்?
-அசுரன்

இக்கட்டுரை 2002 ஆகஸ்‍டில் எழுதப்பட்டது
1945 ஆகஸ்ட் 6 ஆம் நாள் காலை 8.15 மணிக்கு உலகின் முதல் அணுகுண்டு அமெரிக்காவால் சப்பான் மீது வீசப்பட்டது. இதில் பல்லாயிரம்பேர் கொல்லப்பட்டனர். இலட்சக்கணக்கானோர் காயமடைந்தனர், உயிர் பிழைக்கத் தப்பியோடினர். சில நிமிடங்களில் ஹிரோசிமா நகரமே அழிந்துபோனது. இறந்தவர்களின் சாம்பல் மட்டுமே மிஞ்சியிருந்தது. இதையடுத்து ஆகஸ்ட் 9 ஆம் நாள் சப்பானின் நாகசாகி நகரின் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது. இதிலும் எண்ணற்ற இழப்புகள். ஏதாவது எஞ்சியிருக்குமா என்று மீட்புப்பணியாளர் ஒருவர் ஹிரோசிமாவில் பார்வையிடும் காட்சி இது.

0 Comments:

Post a Comment

<< Home